ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday 31 December 2010

நல்லோர்கள் வாழ்வைக் காக்க..! - புத்தாண்டு சிறப்புப் பாடல்..!


'நல்லோர்கள் வாழ்வைக் காக்க... நமக்காக நம்மைக் காக்க... ஹேப்பி நியு இயர்..!' என்ற புத்தாண்டு பாடலை சிறப்புப் பதிவாக இன்று இடுகின்றேன்

1982 -ம் வருடம் தமிழ்ப்புத்தாண்டு அன்று, சி.வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான சங்கிலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை, தெரிந்திருப்பின் தகவல் தரவும். இசையமைப்பு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, பாடியவர் நமது டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள்...

இந்த தளத்திற்கு பேராதரவு தரும் எனதருமை இணைய வாசகர்களுக்கு... எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைக் கூறி இப்பாடலைப் பதிவிலிடுகிறேன்... கேட்டு மகிழுங்கள்.. பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


நல்லோர்கள் வாழ்வைக் காக்க..! | Upload Music

இனி இப்பாடலைப் பற்றிய சுவாரசியத் தகவல்கள்


@ 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசனின் இளைய மகனான, 'இளையதிலகம்' பிரபு அறிமுகமான படம்தான் இந்த சங்கிலி. 

@ 'இளைய திலகம்' பிரபுவின் பிறந்த நாள் இன்று (31.12.1956).

@ 1970களிலும் 80களிலும் தென் மாவட்ட மக்களின் மிகப்பெரிய பொழுது போக்காக இருந்தது இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை. அப்துல் ஹமீது போன்ற பல அறிவிப்பாளர்களின் கவர்ச்சியான குரல் வளம் மற்றும் (ஆல் இந்தியா ரேடியோவில் கேட்கமுடியாத) புதிய திரைப்படப் பாடல்களால் தென் மாவட்ட மக்களின் மனம் கவர்ந்தது இலங்கை வானொலி. அதில் ஒவ்வொரு வாரமும் (ஞாயிறு மதியம்) பாடல்கள் ரசிகர்களின் வாக்குகள் ( அஞ்சலட்டையில் அனுப்பலாம்) அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும். 

10 வது பாடலில் தொடங்கி வாக்குகளின் எண்ணிக்கையோடு ஒவ்வோரு பாடலும் அறிவிக்கப்படுவதைக் கேட்க வீடுகளிலும், டீக்கடைகளிலும் பெரும் திரளான மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்களாம். 

இந்தப் போட்டியில் மிக அதிகமான வாரங்கள் ( 50க்கு மேல் இருக்கக்கூடும்) முதலிடத்திலேயே இருந்த பாடல்களில் ஒன்றுதான் இந்த சங்கிலி படத்தில் வரும் " நல்லோர்கள் வாழ்வைக் காக்க"  பாடல்.

*******

@ சிவாஜிகணேசனின் 223வது படம் "சங்கிலி",  பிரபுவிற்கு முதல் படம். இப்படத்தில் பிரபு முக்கிய குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

இந்தப் படத்தை "அருண் சுஜாதா கம்பைன்ஸ்" பட நிறுவனம் தயாரித்தது. வசனத்தை ஏ.எல்.நாராயணன் எழுதினார். இந்தியில் வெளியான "காளிச்சரண்" என்ற படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது இப்படம். பிரபு நடிகரானது பற்றி பிற்காலத்தில் சிவாஜிகணேசன் கூறியதாவது:-

"பிரபு என் மகன். அவனைப்பற்றி நானே கூறுவது அவ்வளவு நன்றாக இருக்காது. எனினும், அவன் பெரிய ஸ்போர்ட்ஸ்மேன். "ஜாவலின் த்ரோ" என்ற விளையாட்டில் சேம்பியன். ஜாவலின் எறிந்தான் என்றால், கிரவுண்டை விட்டு வெளியே தூக்கி எறிந்து விடுவான்.

மிக வேகமாக ஓடுவான். டிராக்கில் ஓடினான் என்றால், ஒரு வெள்ளைக் குதிரை ஸ்லோ மோஷனில் ஓடி வருவது போல இருக்கும். அவனை மிகச் சிறப்பாக படிக்க வைத்து, ஒரு நல்ல போலீஸ் ஆபீசராக உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். என் ஆசை நிறைவேறவில்லை.

எனக்குத் தெரியாமலேயே என் தம்பி சண்முகமும், டைரக்டர் சி.வி.ராஜேந்திரனும் திடீரென்று ஒரு நாள் வந்து, "இந்தப் புதுமுக நடிகனைப் பாருங்கள்" என்று கூறி பிரபுவை என் பக்கத்தில் நிறுத்திவிட்டார்கள். அதுவும் எனக்கு வில்லனாக! அந்தப்படம் தான் "சங்கிலி."

@ முதன் முதலாக மதுரை - அலங்கார் திரையரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த படம் - சங்கிலி. 

@ 14.04.1982 அன்று வெளியாகி 80 நாட்களை கடந்து ஓடிய சங்கிலி இலங்கையில் 100 நாட்கள் ஓடி வெற்றி விழா கண்டது. 




Friday 24 December 2010

அச்சம் என்பது மடமையடா..! - பழைய திரைப்படப் பாடல் (எம்.ஜி.ஆர் நினைவுநாள் சிறப்புப் பாடல்)

'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா...' என்ற பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 23-வது நினைவு தினமான இன்று... அவரது நினைவாக இப்பாடலை கனத்த இதயத்தோடு பதிவிலிடுகிறேன்...

நடேஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், எம். நடேசன் அவர்களின் இயக்கத்தில் 19.10.1960 அன்று வெளியான மன்னாதி மன்னன் திரைப்படத்தில் ஆரம்ப காட்சியே இப்பாடலாகத்தான் இருக்கும்... இப்பாடல் பாடிக்கொண்டிருக்கும் போது இப்படத்தின் டைட்டில்களும் வந்துவிடும்...

இப்படத்திற்கு பாடல்கள் மட்டுமல்ல கதைவசனத்தையும் கவியரசர் கண்ணதாசனே எழுதியிருக்கிறார்... (இப்படத்தின் சில பாடல்களை கவிஞர் மருதகாசியும் எழுதியிருக்கிறார்...) மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.வியும் ராமமூர்த்தியும் இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். டி.எம்.எஸ் அவர்கள் இப்பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார்...

நமக்கென்று ஒரு வரலாறு உண்டு... வீரம் உண்டு... என்பதையும் திராவிடர்கள் எதற்கும் அஞ்சியதில்லை... இமயத்தையே அசைத்துப் பார்த்தவர்கள் என்ற பழங்கால சரித்திரத்தையும் இப்பாடலில் அழகாய்ப் புகுத்தியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்...

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


அச்சம் என்பது மடமையடா..! | Upload Music

இன்று இப்பாடல் வெளியிடக் காரணமும் இருக்கிறது...

'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்...' - என்ற இப்பாடலின் வரிகளுக்கேற்ப வாழ்ந்து மறைந்தாலும் மக்களின் மனதில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார்...

இப்பாடல் குறித்த சில கண்ணீர்த் தகவல்கள்

@கண்ணதாசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் சர்வகட்சித் தலைவர்கள் (தி.மு.க. நீங்கலாக) கலந்துகொண்ட இரங்கல் கூட்டம் 24.10.1981 அன்று நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை அமைச்சராக அன்று பதவி வகித்த ராஜதுரை உரையாற்றம்போது, “கண்ணதாசன் எழுதிய பாடலைத் தவிர வேறு யார் எழுதிய பாடலையும் இரண்டாவது முறை கேட்கமுடியாது என்று முதல்வர் எம்.ஜி.ஆர். ஒருமுறை பாராட்டிக் கூறினார். முதல்வருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்த நேரத்தில் இதனைக் குறிப்பிட்டார்!” என்று கூறினார்.


இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய தமிழகத்தின் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ‘அச்சம் என்பது மடமையடா!’ பாடலை டேப்பில் இருந்து ஒலிக்கச் செய்தார்.


பின்னர் பேசும்போது,


“இந்தப் பாட்டின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தால் இதை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலந்தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது. சாதாரண மக்களும் இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் பாடல்களைப் படைத்தவர் கண்ணதாசன்.
கண்ணதாசன் பாடி, நடித்த பாடல்காட்சிகளை தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்ப வேண்டும்!” என்று குறிப்பிட்டார்.

@எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாடலாகும்!

@ஒரு முறை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த பழைய தமிழ்ப் பாடல் எது என்று கேட்டபோது... அவரின் முகம் நிலவு போல் மலர்ந்தது... தனக்கு சரியாக பாட வராது என்று சொல்லி விட்டு, தன் சிம்மக் குரலில் 'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா... ஆறிலும் சாவு... நூறிலும் சாவு... தாயகம் காப்பது கடமையாடா...' என பாடிக் காட்டினார்... (இந்த மாவீரர் தாயகத்தை காப்பதற்காக தன் இன்னுயிரை ஈந்து விட்டார்...)

இந்த மூன்று சரித்திரங்களும் வாழ்ந்து மறைந்தாலும்... மக்களின் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள்..!

இப்பாடலின் திரைவடிவம் இதோ..!






Tuesday 21 December 2010

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

'காலமிது காலமிது... கண்ணுறங்கு மகளே... காலமிதைத் தவற விட்டால்... தூக்கமில்லை மகளே... தூக்கமில்லை மகளே...' என்ற பாடலை, நேயர் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்....

1966-ல் வெளிவந்த சித்தி திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி, எம்.ஆர். ராதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை அன்றைய வெற்றி இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்...

சித்தி என்றாலே கொடுமைக்காரி என்ற பொய்த்திரையை இப்படம் கிழித்தெறிந்தது. இப்படத்தில் நடிகை பத்மினி ஒரு தாய்க்கு நிகரான சித்தியாக வாழ்ந்து காட்டியிருப்பார்.இப்படத்தில் பத்மினியின் கணவராக நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்பும் படு அமர்க்களமாக இருக்கும்...

நாவல் ராணி, விடுதலைத் தியாகி, துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட வை.மு.கோதைநாயகி அவர்களுடைய கதைதான் இந்த சித்தி திரைப்படம்... இந்த படத்துக்காக சிறந்த கதையாசிரியர் விருது வை.மு.கோதைநாயகிக்கு அவர்களுக்கு, அவர் இறந்த பின் வழங்கப்பட்டது.

இனி பாடலுக்கு வருவோம்....

பெண்ணாக பிறந்தவளுக்கு தூக்கம் என்பது சிறு பிராயத்தில் மட்டுமே.. வளர வளர அவளது தூக்கம் தானாக ஓடிவிடும்... அவளது குடும்பம் நிம்மதியாகத் தூங்குவதற்கு, அவள் அவளது தூக்கத்தை துறக்கிறாள்... (இதை என் அன்னையிடம் நான் கண்டிருக்கிறேன்...) இதுதான் இந்த பாடலின் ஆதார சுருதி...

இதை நமது கவியரசு கண்ணதாசன் தனக்கே உரிய பாணியில் பாமாலையாக கோர்த்தெடுக்க, அம்மலையை இசையால் இழையவிட்டார் நமது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்... இந்த வரிகளுக்கும்... இசைப்பிற்கும் குரல் மூலம் உயிரூட்டியவர் திருமதி பி. சுசீலா அவர்கள்...

குழந்தைகளுக்கு ஏற்ற தாலாட்டுப் பாடலாக ஒலிக்கும் இப்பாடலை நேயர் விருப்பமாக கேட்ட வீணா தேவிக்கு எனது நன்றிகள்... இவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேளுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்... நன்றி..!

-----------------------------------


காலமிது... காலமிது...! | Upload Music

-----------------------------------

Anonymous Veena Devi said...

உங்கள் பாடல் தொகுப்பு மிக அருமை.. நன்றி.

"சித்தி" படத்தில் நடிகை பத்மினி படும் " காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே " பாடலும் ,


கே.ஆர் விஜயா பாடியிருக்கும்" தமிழுக்கும் அமுதென்று பேர் "(படம் தெரியவில்லை ) பாடலையும் தேடிக்கொண்டு இருக்கிறேன் ..

தங்களிடம் இருந்தால் அனுப்பவும்.நன்றி.

--
Cheers
Veena Devi
9 December 2010 14:37
--------------------------------------

(அன்பான வீணா தேவி அவர்களுக்கு... தாங்கள் கேட்ட இரண்டாவது பாடல் கே.ஆர்.விஜயா பாடவில்லை... பி.சுசீலா படிய பாடல்... இப்பாடலை ஏற்கனவே எனது பதிவில் பதிப்பித்திருக்கிறேன்... அதன் இணைப்பு இங்கே:  ''தமிழுக்கும் அமுதென்று பேர் - திரையிசையில் பாரதிதாசன் பாடல்'' 




Friday 17 December 2010

வரதப்பா... வரதப்பா... கஞ்சி வருதப்பா...! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

"வரதப்பா... வரதப்பா...  கஞ்சி வருதப்பா... " என்ற பாடலை இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்...

1971 ஆண்டு, ஏ.சி. திரிலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்த பாபு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அருமையான துள்ளலிசைப் பாடல் இது.

வாலிபக் கவிஞர் வாலியின் வரிகளைகளுக்கு... மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க... அதற்கு தன் குரல் மூலம் உயிர் கொடுத்தவர் டி.எம். சௌந்திர்ராஜன் அவர்கள்...

இப்படத்தில் நடிகை விஜயஸ்ரீ ஒரு சாப்பாட்டு கூடைக்காரியாக நடித்திருப்பார். அலுவலகங்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, மிச்சமிருப்பதை கைரிக்ஷா ஸ்டாண்டில் உள்ள ரிக்ஷா தொழிலாளர்களுக்கு கொடுப்பவர். அதனால் ரிக்ஷாக்காரர்கள் அனைவரும், மதிய நேரத்தில் அந்தப்பெண்ணை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பர். அந்த நேரத்தில் அவரைக்கண்டதும்தான் அந்தப்பாடல்... 

இப்பாட்டிற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் குத்தாட்டம் போட்டிருப்பார்... இவர் குத்தாட்டம் ஆடிய ஒரே ஒரு பாடல் இதுதான் என நினைக்கிறேன்... ஆட்டம் போல பாட்டும் கலக்கலாக இருக்கும்...
இபபாடலின் வரிகளில் வாலி சமத்துவத்தை சாதம் வடிவத்தில் கொடுத்திருப்பார்...


'குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது 

அது அனுமந்தராவ்............................
அது அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது 

மேரியம்மா கேரியரில் எறா(ல்) இருக்குது 
அது பத்மநாப ஐயர் வீட்டு குழம்பில் கிடக்குது 
சமையல் எல்லாம் கலக்குது...........
அது சமத்துவத்தை வள(ர்)க்குது .......

சாதி சமய பேதமெல்லாம் சோத்தைக்கண்டா(ல்) பறக்குது' 

நண்பர் மணிகண்டனுக்கு பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்...  உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள்...

--------

Anonymous Mani kandan said...

வணக்கம் தோழர் மோகனன் ,

ஒரு சிறிய உதவி செய்ய வேண்டும். எனக்கு "வருதப்பா.. வருதப்பா ... கஞ்சி வருதப்பா... இந்த கஞ்சி கலயம் கொண்டுகிட்டு வஞ்சி வருதப்பா... என்ற பாடல் வேண்டும். அல்லது அந்த படத்தின் பெயர் வேண்டும். பதில் அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். நன்றி....


அன்புடன்,

சு. மணிகண்டன்
11 December 2010 10:31




Tuesday 14 December 2010

மனிதா.. மனிதா... இனி உன் விழிகள்...! - திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

மனிதா.. மனிதா... இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்...! என்ற பாடலை இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1967ல் கீழ வெண்மணியில் தலித் சமுதாயத்திற்கு எதிராக நடந்த கொடூரமான சம்பவத்தை முன் வைத்து இந்திரா பார்த்தசாரதி ‘குருதிப்புனல்’ என்ற ஒரு முக்கியமான நாவலை எழுதினார். இது 1983 -ல் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்ற ஒரு திரைப்படமாக உருவானது.

இப்படத்தை இயக்கியவர் ஸ்ரீதர் ராஜன். இப்படத்திற்கு கதை வசனம் எழுதியவர் யார் தெரியுமா..? கூத்துப்பட்டறையை நடத்தி வரும் நா. முத்துசாமி அவர்கள். தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட் என வர்ணிக்கப்பட்ட ஜெய்சங்கர்தான் இப்படத்தின் கதை நாயகன்.

வர்க்கப் போராட்டத்தை முன்னிறுத்திய இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருக்கும். கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு இசைஞானி இளையாராஜா இசையமைப்பில், கான தேவன் கே.ஜே. யேசுதாஸ் உணர்ச்சி பொங்க பாடியிருப்பார்...


இந்த பாடல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்
பாடலின் ஆரம்பத்தில் வயலின் இசை மெல்ல ஆரம்பமாகும், அதுவே அரை நிமிடங்கள் ஓடியதால் அதை நீக்கிவிட்டு இங்கு கொடுத்திருக்கிறேன்...


இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட லெனின்அவர்களுக்கு எனது நன்றிகள்... அவருக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேளுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்...


மனிதா... மனிதா..! | Upload Music

--------
Anonymous Lenin k said...





வைரமுத்து பாடல்” மனிதா மனிதா இனி உண் விழிகள் சிவந்தால்” அனுப்பவும்.

நன்றி
14 December 2010 11:28




Friday 10 December 2010

சிட்டுப் போல பெண்ணிருந்தா..! - பழைய திரைப்படப்பாடல்


“மாமா… மாமா… மாமா…

ஏம்மா… ஏம்மா… ஏம்மா…
சிட்டுப் போல பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா?”

1961-ல், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் தயாரிப்பில் வெளியான, குமுதம் திரைப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாட்டுகளும் அபார வெற்றி பெற்றவை... அதில் சிறந்த பாடல்தான் இந்த 'சிட்டுப் போல பெண்ணிருந்தா 'பாடல்... கிராமத்து இசை வடிவில் துள்ளலிசையைக் கொடுத்து, மக்களிடம் மகத்தான வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற பாடல் இது என்றால் அது மிகையல்ல...


எசப்பாட்டு வடிவில் காதலனும் காதலியும் பாடுகின்ற பாடல் இது... காதலன் காதலியின் கையை தொட முயல... அப்படி செய்யலாகுமா என காதலி கூறுகிறாள்... அட்டகாசமான துள்ளலிசை கலந்த இப்பாடலை இன்று கேட்டலும் நம்மை துள்ளாட்டம் போட வைக்கும்...


திரைக்கவித் திலகம் மருதகாசி எழுதிய இப்படாலுக்கு, திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்திருக்கிறார். இப்பாடலை டி.எம்.எஸ் அவர்களும் ஜமுனா ராணி அவர்களும் இணைந்து துள்ளும் குரலோடு பாடியிருப்பார்கள்... இவர்களுடன் கோரஸும் மிக அருமையாக இருக்கும்...


எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... 
உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள் இயன்றவரை தேடி எடுத்துத் தருகிறேன்



சிட்டுப் போல பெண்ணிருந்தா..! | Upload Music




Friday 3 December 2010

இந்த பச்சைக்கிளிக்கொரு..! - திரைப்பாடப் பாடல் (நேயர் விருப்பம்)


'இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்...' 1976-ல் வெளிவந்த நீதிக்குத் தலைவணங்கு திரைப்படத்தில் இடம் பெற்ற தாலாட்டுப் பாடல்...

இப்படத்தில் எம்.ஜி.ஆரின் தாயாராக பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி நடித்திருப்பார், அவர் குரலில் இப்பாடலைப் பாடியிருப்பார். அப்பாடல் வெறும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே ஒலிப்பதால் அதை நான் தேர்வு செய்யவில்லை..

எம்.ஜி.ஆருக்காக கான தேவன் கே.ஜே. யேசுதாஸ் குரல் கொடுக்க ஆரம்பித்த காலம் இது... இப்பாடலை எம்.ஜி.ஆருக்காக இவர் பாடினார்... கவிஞர் புலமைப்பித்தனின் வரிகளுக்கு மெல்லிசை மன்னரின் இன்னிசையில் தாலாட்டிசையாக வரும் இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட அன்புத் தோழி கலையரசிக்கு எனது நன்றிகள்...

இப்பாடலில் இடம் பெறும் வரிகள் காலத்தால் மறையாத, மாற்றமுடியாத வரிகளாகும்...

''எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கயிலே...
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே...''

நீங்களும் கேட்டுப் பாருங்கள் இப்பாடலை...

உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள் இயன்றவரை தேடி எடுத்துத் தருகிறேன்



இந்த பச்சைக்கிளிக்கொரு... | Upload Music


----

Anonymous Kalaiarasi said...

Can you please provide 'Intha pachchai kilikku sevvandhi poovil thotilai katti vaipen' song from 'Needhikku thalai vanangu' movie which was sung by varalakshmi ?

kalaiarasi
9 September 2010 12:47



Tuesday 30 November 2010

பிறக்கும் போதும் அழுகின்றாய்..! - பழைய திரைப்படப்பாடல்


''பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்...'' என்ற பாடலை என் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன். இப்பாடல் அன்று பல இந்தியத் தலைவர்களையே உருக வைத்திருக்கிறது... இப்பாடல் உருவான விதம், சுவாரசியமான சம்பவம் இரண்டு பின்னிணைப்பாக கொடுத்துள்ளேன்...

1960-அன்று, கவிஞர் கண்ணதாசனின் தயாரிப்பில், சந்திரபாபு கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் கவலை இல்லாத மனிதன்.


இப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் மிகச்சிறந்த தத்துவப் பாடலாக இன்று மட்டுமல்ல... என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் இது...

கவிஞர் திரு. கண்ணதாசனின் தனது காவிய வரிகளில் நாலே நான்கு வரிகளில் ஒரு பல்லவியும், நான்கு நான்கு வரிகளில் இரண்டு சரணங்களும் மிக அழகாக எழுதியிருப்பார்...

இந்த வரிகளுக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி அவர்கள் இசையமைத்திருக்க... நகைச்சுவை நாயகர் சந்திரபாபு குரல் கொடுத்திருப்பார்... கேட்டுப் பாருங்கள் இப்பாடலை... 

உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள் இயன்றவரை தேடி எடுத்துத் தருகிறேன்
----

இப்பாடல் பிறந்த விதம்

(சந்திரபாபுவும், மெல்லிசை மன்னர் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆவர்...)

சந்திரபாபு : " விசு, இந்த படத்துலே எனக்கு " டப்பாங்குத்து " பாடல் எல்லாம் வேணாம் ! இந்தியிலே சைகால் பாடுவது மாதிரி ஒரு தத்துவப் பாடல் பாடணும்டா ! " (சோகமான பாடல்களை லோ பிட்ச்சில் பாடுவதில் இவர் வல்லவர்)

மெல்லிசை மன்னர் :  " ஆமாம் , நீ போடுகிற போட்டுக்கு இது வேறயா! சகிக்காதுடா! பேசாமல் இருடா!" இருவருக்கும் சண்டை நடந்தது ! - வாக்கு வாதம் ! இறுதியில் சந்திரபாபு வென்றார் !

-
என்ன பாட்டு அது ? கண்ணதாசன் யோசிக்க ஆரம்பித்தார் ! 

அந்த சமயத்தில் தான் மாபெரும் கவிஞர் பட்டுக்கோட்டை
 கல்யாண சுந்தரம் அவர்கள் காலமானார். இந்த துயர செய்தி கண்ணதாசனை கலங்க வைத்தது. என்ன செய்தும் அவரை சமாதானப் படுத்த முடியவில்லை. இதனை நேரில் பார்த்த சந்திரபாபு , கண்ணதாசனை சமாதானம் செய்யும் நோக்கில் கீழ்கண்டவாறு பேசினார் :

" பட்டுக்கோட்டை ஒரு பெரிய மேதை. அவர் புகழுடன் இருக்கும் போதே மறைந்து விட்டார். இப்போ அவர் போய்ட்டாரு - நாம் போக வேண்டிய நாளும் வரும் ! ஆனா, நாம் மறைந்த பின்னரும் எல்லோரு நம்மை நினைத்து அழ வேண்டும் ! நாம் இறந்ததற்காக யாரும் நிம்மதி அடையக்கூடாது ! " 

என்று அவர் சொன்னதைக் கேட்டவுடன்... கண்ணதாசனுக்கு பாடல் பிறந்தது! எழுதினார் !

" பிறக்கும் போதும் அழுகின்றாய் !
இறக்கும் போதும் அழுகின்றாய் !
ஒரு நாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே ! " 

ஆக,பட்டுக்கோட்டையார் மறைந்த பிறகு அவரை நினைத்து, சந்திரபாபுவின் தூண்டுதலால் கவிஞர் இந்த பாடலை எழுதினார்! இதுதான் இந்த பாடலின் பிண்ணனி !

இந்த பாடல் குறித்த ஒரு சுவாரசியமான சம்பவம்

1965 - ம் வருடம் இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் வந்தபோது, எல்லையில் வீரர்களை மகிழ்விக்க நம் தமித் திரை உலகம் போன போது , திரும்பி வரும் வழியில் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்புடைய குடியரசுத் தலைவராக அப்போதிருந்த டாக்டர் .எஸ் . ராதாகிருஷ்ணன் தமிழ் திரை உலகத்தினரை குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றனர் . குடியரசுத்தலைவர் அவர்களை வரவேற்று " ராஜ மரியாதையோடு " விருந்து கொடுத்து உபசரித்தார் !

சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் , சாவித்திரி, தேவிகா , பத்மினி, ஜெயலலிதா, பி.பி. ஸ்ரீநிவாஸ், கண்ணாதாசன் , மெல்லிசை மன்னர் , பி. சுசீலா, ஏ.எல். ஸ்ரீனிவாசன், இவர்களுடன்... சந்திரபாபு ஆகியோர் விருந்துக்கு சென்றனர்.

விருந்து முடிந்தவுடன் , ஒரு பெரிய கூடத்தில் அனைவரும் அமர்ந்து குடியரசுத் தலைவருடன் உரையாடினர்.
 சிறிது நேரம் கழித்து...

குடியரசுத் தலைவர் : "யாராவது பாடுங்களேன்..?"

மெல்லிசை மன்னர்: ( தயக்கத்துடன்.....) "ஆர்மோனியப் பெட்டி இல்லாமல் எப்படி..?"

குடியரசுத்தலைவர் : "அவ்வளவுதானே ! இதோ ஆர்மோனியப் பெட்டியை கொணரச் சொல்கிறேன்!"

பத்தே நிமிடங்களில் அந்த மாபெரும் மாளிகையில் இருந்து எங்கிருந்தோ ஓர் ஆர்மோனியப் பெட்டி மெல்லிசை மன்னர் முன்பு வைக்கப் பட்டது !

முதலில் பி.பி.எஸ் பாடினர்!
"காலங்களில் அவள் வசந்தம்..!"

குடியரசுத்தலைவர் பாடலை மிகவும் ரசித்தார் !


பின்பு சந்திரபாபு பாட ஆரம்பித்தார் !

"பிறக்கும் போது அழுகின்றாய்..!
இறக்கும் போது அழுகின்றாய்..!"


அந்த பாடலை தன மெய் மறந்து கேட்ட டாக்டர் .எஸ் . ராதாகிருஷ்ணன் "அடடா..! என்ன அர்த்தமான பாடல் ! பிரமாதம்..!" என்று மனம் திறந்து பாராட்ட, இதனைக் கேட்ட சந்திரபாபுவுக்கு குஷி தாங்கவில்லை!

தனது இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்து, வேகமாகச் சென்று குடியரசுத்தலைவரின் மடியில் அமர்ந்து அவர் தோளில் கையைப் போட்டு , அவர் தாடையை பிடித்து 
"கண்ணா..! ரசிகன்டா நீ..!" என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்லிவிட்டார் !

குடியரசுத்தலைவர் என்றும் பாராமல் சந்திரபாபு செய்த 
செய்கை சிவாஜிக்கும், ஜெமினிக்கும் ஆத்திரத்தை உண்டாக்க, பாட்டை நிறுத்தச் சொல்லி மெல்லிசை மன்னரை அவர்கள் முறைக்க...

ராதாகிருஷ்ணன் அவர்களோ... பதிலுக்கு அவர் சந்திரபாபுவின் தாடையை பிடித்து மகிழ... ஒரே "ஜிலு.. ஜிலு..." என்று அந்த சூழ்நிலை அமைந்தது !


தகவல் உதவி: திரு. எம்கேஆர். சாந்தாராம்

இப்பாடலின் திரை வடிவம்


pirakkum pothum alukinrai
Uploaded by danceupanddown. - Watch original web videos.




Saturday 27 November 2010

சமரசம் உலாவும் இடமே..! - பழைய திரைப்படப் பாடல்


''சமரசம் உலாவும் இடமே... நம் வாழ்வில் காணா... சமரசம் உலாவும் இடமே...'' என்ற பாடலை என் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்.

28.09.1956-அன்று, கல்பனா பிக்சர்ஸ் தயாரிப்பில், திரு. ஆர்.ஆர், சந்திரன் இயக்கதில் வெளியான திரைப்படம்  ரம்பையின் காதல்.

இப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் அமரகாவியப் பாடலாக இன்று மட்டுமல்ல... என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும். எல்லோருடைய மரணத்திற்குப் பிறகு இருக்கும், வசிக்கும், உறங்கும் இடம் எதுவெனில் அது சுடுகாடுதான்.

இங்கு ஆண்டி ஆனாலும் சரி, அரசன் ஆனாலும் சரி... மேலோர் ஆனாலும் சரி, கீழோர் ஆனாலும் சரி... எல்லோரும் இங்கு சமம் என்பதை அமர கவிஞர் திரு. மருதகாசி தனது மந்திர வரிகளில் கோடிட்டுக் காட்டியிருப்பார்...

இந்த வரிகளுக்கு இசையரசர் டி.ஆர். பாப்பா இசையமைத்திருக்க... வெண்கலக் குரலோன் திரு சீர்காழி கோவிந்தராஜன் குரல் கொடுத்திருப்பார்... கேட்டுப் பாருங்கள் இப்பாடலை... நாம் பிறந்து என்ன சாதித்திருக்கிறோம்... இறப்பின் பின் எங்கு சாந்தமாவோம் என்று இப்பாடல் நன்கு உணர்த்தும்...

உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள் இயன்றவரை தேடி எடுத்துத் தருகிறேன்


சமரசம் உலாவும் இடமே..! | Musicians Available

இப்பாடலின் திரை வடிவம் இங்கே...



நன்றி: யூ டியூப்



Wednesday 17 November 2010

ஏ புள்ள ராசாத்தி..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்..!

'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ளலிசைப் பாடல்...

ஆரம்பத்திலிருந்தே துள்ளலிசை உங்களை மட்டுமல்ல உங்களு காதையும் ஆட வைக்கும்... நையாண்டி மேளம்.. நாதஸ்வரம், புல்லாங்குழல் என கிராமிய இசை பின்னியெடுக்கும்... அடடா... தமிழிசைன்னா... தமிழிசைதான்...

'ஏ புள்ள ராசாத்தி... என் பாட்ட கேளாத்தி... ஏரிக்கரை பக்கம் வாடி ஏலே செல்லம்மா..' என தலைவன் கேட்க பதிலிருக்கிறாள் தலைவி... எசப்பாட்டு வடிவத்தில் இப்பாடல் ஒலிக்கிறது...

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... பிடிசிருந்தா இலவசமா பதிவிறக்கம் பண்ணிக்கோங்க...உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...


ஏ புள்ள ராசாத்தி...! | Upload Music

நன்றி: திரு. புஷ்பவனம் குப்புசாமி & அனிதா குப்புசாமி



Tuesday 17 August 2010

மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா..! - பழைய திரைப்படப் பாடல்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் 1956-ல் வெளிவந்த 'தாய்க்குப் பின் தாரம்' என்ற படத்தில் இடம் பெற்ற ''மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே..!'' என்ற பாடல்தான் இன்று நான் பதிவிலிடப் போகும் பாடலாகும்.

திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசையமைப்பில், கவிஞர் மருதகாசியின் வைர வரிகளில், டி.எம்.சௌந்திரராஜன் குரலில் இப்பாடல் உயிர் பெற்றது.

மருதகாசியினால் படைக்கபட்ட இப்பாடல்களில் உள்ள வரிகள் அத்துனையும் வைரம் என்றே சொல்லலாம்... இப்பாடலில் மூன்று சரணங்கள் உள்ளன.. ஒவ்வொர் சரணத்திலும்... சமூகத்திற்கான கருத்துக்களை உள்ளடக்கி, மிக எளிமையாகக் கொடுத்திருப்பார்...

முதல் சரணத்தில்...


''வானம் பொழியுது... பூமி விளையுது தம்பிப் பயலே..!''
நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே..!
ஆனா தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே..!

இரண்டாவது சரணத்தில்...

''தரையைப் பாத்து நிக்குது நல்ல கதிரு..!
தன் குறையை மறந்து மேல பாக்குது பதரு..!
அதுபோல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே..!
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது வெளியிலே..!''

மூன்றாவது சரணத்தில்...
''ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே..!
எதுக்கும் ஆமாஞ் சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே..!''


எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..!



மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா..! | Musicians Available


இப்பாடலின் திரை வடிவம் இங்கே...



நன்றி: யூ டியூப்



Wednesday 11 August 2010

சந்தைக்கி வந்த கிளி..! - திரைப்படப் பாடல்

தர்மதுரை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற அட்டகாசமான துள்ளலிசை பாடல்தான் இந்த "சந்தைக்கி வந்த கிளி..! சாடை சொல்லி பேசுதடி" பாடல்.

1991-ல் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் ராஜசேகர். (இவர் மலையூர் மம்பட்டியான், மாவீரன், காக்கிச் சட்டை, விக்ரம், படிக்காதவன், தம்பிக்கு எந்த ஊரு.. போன்ற படங்களை இயக்கியவர். தர்மதுரை படத்தின் நூறாவது நாளன்று மாரடைப்பால் இவர் அமரராகிவிட்டார்)

இப்பாடலுக்கு இசையமைத்தவர் நம் இசைஞானி இளையராஜா அவர்கள். பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர். இப்பாடலை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. ஆனால் இப்படத்திற்கு பாடல் எழுதியவர்கள் இரண்டு பேர். பஞ்சு அருணாசலம், கங்கை அமரன் ஆகியோர். சரியான தகவல் இருப்பின் கொடுத்து உதவும்...

இப்பாடலில் இளையராஜாவின் துள்ளலிசை அட்டகாசமாக இருக்கும்... அதற்கு இணையாக பாடகர்களும் இணைந்து கலக்கியிருப்பார்கள்...

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... பிடிச்சிருந்தா இலவசமா பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க..! உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க...



சந்தைக்கி வந்த கிளி..! | Music Codes



Wednesday 4 August 2010

தாமரை தெப்பத்துல..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்.!

'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ளலிசைப் பாடல்...

ஆரம்பத்திலிருந்தே துள்ளலிசை உங்க காதை ஆட வைக்கும்... நையாண்டி மேளம்.. உருமி மேளம் என கிராமிய இசை பின்னியெடுக்கும்...  அடடா... தமிழிசைன்னா... தமிழிசைதான்...

தாமரை தெப்பத்துல... தலைமுழுகி போற புள்ள.. நீ குளிக்கும் தெப்பத்தில நான் குளிச்சா ஆகாதோ..? என தலைவன் கேட்க பதிலிருக்கிறாள் தலைவி... எசப்பாட்டு வடிவத்தில் இப்பாடல் ஒலிக்கிறது...

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...


தாமரை தெப்பத்துல..! | Musicians Available

நன்றி: 'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமி & குழுவினர்



Monday 2 August 2010

சின்ன பாப்பா... எங்க செல்ல பாப்பா..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

வண்ணக்கிளி என்ற படத்தில் இடம் பெற்ற அற்புதமான பாடல்தான் இந்த 'சின்ன பாப்பா... எங்க செல்ல பாப்பா..!'.. இன்று இப்பாடல் நேயர் விருப்பப் பாடலாக இடம் பெறுகிறது.

1959-ல் வெளிவந்த இப்படத்தினை இயக்கியவர் டி.ஆர். ரகுநாத், தயாரிப்பு: டி.ஆர்.சுந்தரம்(சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்). நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர்தான் இப்படத்தின் கதாநாயகர். (பல படங்களில் வில்லனாக நடித்தவர்). இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மிகவும் அட்டகாசமான பாடல்களாகும்.

இப்பாடலை எழுதியவர் அநேகமாக மருதாகாசியாகத்தான் இருக்கவேண்டும்..! (தவறெனில் சரியான கவிஞர் யார் எனத் தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்..!) திரை இசைத் திலகம் கே.வி. மகாதவன் இசையமைப்பில், குரலில் பி. சுசீலாவின் தேனினும் இடிய குரலில் மழலைகளைத் தாலாட்டிக் கொஞ்ச வருகிறது இப்பாடல்...

இப்பாடலினை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட தோழி கலையரசிக்கு எனது நன்றிகள்... இவருடன் சேர்ந்து நீங்களும் இப்பாடலைக் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவாசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! நன்றி..!


சின்ன பாப்பா... எங்க செல்ல பாப்பா..! | Upload Music

இப்பாடலின் திரை வடிவம் 



நன்றி: யூ டியூப்
---------------------
Blogger kalaiarasi said...
Hi, Can you please upload 'Chinna pappa, enga chella pappa Sonna pechcha kettadhan nalla pappa' song for my daughter ? Thanks Kalai
1 July 2010 11:22
Delete




Friday 30 July 2010

சின்ன மணிக் கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு..! - திரைப்படப் பாடல்


வண்ண வண்ண பூக்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற சோகப் பாடலிது...

1992 - ல் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்திள்கு இசையமைத்தவர், நமது இசைஞானி இளையராஜா அவர்கள். இப்பாடலை எழுதிய கவிஞர் யார் என்று தகவல் அறித்தால் நலமாக இருக்கும்.. நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இப்பாடலைப் பாடிவர், எனக்கு மிகவும் பிடித்த பாடகரான ஏழிசை மன்னர், கானதேவன் கே.ஜே யேசுதாஸ் அவர்கள்... இப்பாடல் ஒரு சோகப்பாடிலாகும்...

கதாநாயகியுடன் கதாநாயகன் சேர நினைப்பான், ஆனால் கதாநாயகியோ அவனுடன் சேர மறுத்து விடுவாள். அதற்கான காரணத்தை (கதாநாயகிக்கு கொடும் நோய் இருப்பதால், அவள் விரைவில் இறக்கப் போகிறாள்) கதாநாயகனிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறாள். அவனை ஏற்க மளுப்பது ஏன் என கதநாயகியிடம், கதாநாயகனின் நண்பன் வினவுகிறான்... அவனிடம் உண்மையைக் கூறுகிறாள்... அச்சூழலில் அந்த நண்பன் பாடும் பாடல்தான் இது...

இப்பாடலை கேட்டுப் பாருங்கள்... உங்கள் மனதையும் இது சற்று நெகிழச் செய்து விடும்...  யேசுதாஸின் மனதைப் பிழியும் குரலும், இளையராஜாவின் இனிய மெல்லிசையும் உங்கள் மனதை உரசிப் பார்க்கும்...

எனக்குப் பிடித்த இப்பாடலை என்னுடன் சேர்ந்து நீங்களும் கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!



சின்ன மணிக் கோயிலிலே..! | Upload Music

(இது என்னுடைய 50-வது பதிவு என்பதில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.. இதற்கு ஆதரவு தரும் உங்களனைவருக்கும் எனது நன்றிகள்..)



Monday 19 July 2010

பட்டணந்தான் போகலாமடி பொம்பளே..! - பழைய திரைப்பாடல்

எங்கள் வீட்டு மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'பட்டணந்தான் போகலாமடி பொம்பளே..! காசு பணம் சேக்கலாமடி..!' என்ற பாடல் என் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது.

இப்பாடலுக்கு தனிச்சிறப்பு ஒன்று உண்டு... அது எதுவென்றால் சீர்காழி கோவிந்தராஜனும்,பி.சுசீலாவும் இணைந்து பாடிய முதல் பாடல் இதுவே.
1957-ல் வெளி வந்த இத்திரைப்படத்தினை இயக்கியவர் சுப்பையா ராவ் அவர்கள். இப்படத்திற்கு இசையமைத்தவர் மாஸ்டர் வேணு அவர்கள்...

அற்புதமான இப்பாடலை இயற்றிவர் உடுமலை நாராயணகவி அவர்கள்... (தகவல் உதவி: சுக்ரவதநீ நண்பர். திரு எஸ். எஸ். பேராசிரியர் கந்தசாமி அவர்கள்)

'கெட்டும் பட்டணம் சேர்' எனும் பழமொழிப்படி பட்டணம் சென்று பிழைக்கலாம் என எண்ணும் விவசாயி ஒருவனுக்கு அவனது மனைவி, பட்டணத்து வாழ்வில் உள்ள தீமைகளை விளக்கி அறிவுரை கூறுகிறாள். (பட்டணம் என்பது இங்கே அயல்நாட்டினையும் குறிக்கும் என எடுத்துக் கொள்ளுங்கள்...)

கிராமத்தை விட்டுப் பட்டணம் சென்று சீர்கெட்டு மடியாமல் கிராமத்திலேயே விவசாயம் செய்து சிறப்பாக வாழலாம் என்று மனைவி சொல்லும் அறிவுரையை செவிமடுத்து, பட்டணம் போகும் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறான் கணவன். மேலும் இப்பாடலில் தன் மனைவியை தாயே என்றும் அழைக்கிறான் கணவன்...

இச்சம்பவத்தை ஒரு நாட்டிய நாடக வடிவில் படமாக்கியுள்ளனர் இத் திரைப்படத்தில்... 


வரிகள் அத்துனையும் சாட்டையடி... உதாரணத்திற்கு...

வேலை ஏதுங்க கூலி ஏதுங்க..
வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க - அங்கே
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க..
வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க...
காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதாம்...
பிஏ படிப்பு பெஞ்சு தொடைக்குதாம்..
ஆளை ஏச்சு ஆளு பொழைக்குதாம்..
அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்..!''


எந்த கதாயாநகனும் தன்னை தாழ்த்தி வரும் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மாட்டான்.. ஆனால் இப்பாடலில் கதாநாயகனே தன் மனைவியின் அறிவுரையால் திருந்தி, தனது தாழ் நிலையைக் கூறுகிறான்.. அடடா என சொல்ல வைக்கும் வரிகளும் இதிலுண்டு...

''நீ ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி..
நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி - நீ
ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாகத் தோணுது''



இந்த அருமையான பாடலுக்கு கிராமிய பிண்ணனிநில் துள்ளலிசையோடு வழங்கியிருக்கும் இசையமைப்பாளருக்கும், அட்டகாசமாய்க் குரல் கொடுத்த திரு. சீர்காழி கோவிந்த ராஜன், சுசீலா அவர்களுக்கும் ஒரு சலாம் போடலாம்...
இப்பாடலுக்கு குரல் கொடுத்த பெண் பாடகி சிலர் ஜமுனா ராணி என்றும், சிலர் சுசீலா என்றும் சொல்கின்றனர். யாழ் சுதாகரும் இதே கருத்தை வழி மொழிவதால்.. நானும் அதையே வழி மொழிகிறேன்... இந்த தகவல் தவறெனில் ஆதாரத்துடன் நிரூபிக்கவும்...

என்னுடன் சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!


பட்டணம்தான் போகலாமடி பொம்பளே..! | Music Codes



Wednesday 14 July 2010

வைகைக் கரை காற்றே நில்லு..! - திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

'உயிருள்ளவரை உஷா' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'வைகைக் கரை காற்றே நில்லு..! வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு..!' என்ற பாடல் இன்றைய நேயர் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது.

1984-ல் வெளியானது இப்படம். இப்பாடலுக்கு இசை டி. ராஜேந்தர். குரல் கொடுத்தவர் எனக்கு மிகவும் பிடித்த பாடகரான கானதேவன் கே.ஜே. யேசுதாஸ் அவர்கள்...

இப்பாடலை இயற்றியதும், இசையமைத்ததும் யார் தெரியுமா..? இப்படத்தின் இயக்குனரான டி. ராஜேந்தரேதான். காதலியைக் காணமுடியமல் தவிக்கும் தவிப்பை வரிகளிலே வடித்திருப்பார் டி. ராஜேந்தர்... அதற்கு மிகவும் அருமையான முறையில் இசையினையும் அமைத்திருப்பார்...

''நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ...
சோகமது நீங்காதோ...
காற்றே... பூங்காற்றே...
என் கண்மணி அவளைக்
கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
..''

'வைகைக் கரை காற்றே நில்லு..! வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு..!' என்ற பாடலைக் கேட்ட அன்பு நண்பர் கிறுக்கல் கிறுக்கனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

அவரோடு சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!



வைகைக் கரை காற்றே நில்லு..! | Music Codes


---------------------------------
கிறுக்கல் கிறுக்கன் said...
பாடலுக்கு நன்றி.

அடுத்து நேயர் விருப்பத்தில் “வைகைக் கரை காற்றே நில்லு, வஞ்சிதனை பார்த்தால் சொல்லு” என்னும் வரிகள் வரும் பாடல்.

நண்பரே இந்த நேயர் விருப்பம் இன்னும் வரும்...

2 June 2010 19:57




Tuesday 29 June 2010

பொதுவாக என் மனசு தங்கம்..! - திரைப்படப் பாடல்..!

'சூப்பர் ஸ்டார்' ரஜினி காந்த் நடிப்பில் 1980-ல் வெளியான முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்ற துள்ளலிசைப் பாடல்தான் 'பொதுவாக என் மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்...' என்ற பாடல்தான் இன்று நான் பதிவிலிடுவது...

இப்பாடலின் வரிகளை எழுதியவர் திரு.  பஞ்சு அருணாச்சலம், இசையமைப்பு நமது இசைஞானி இளையராஜா. குரல் கொடுத்து உயிரூட்டியவர் மலேசியா வாசுதேவன் அவர்கள். இபட்டத்தை இயக்கியவர் ரஜினியின் பிரதான இயக்குனரான எஸ்.பி.முத்துராமன்.

இப்படம் ரஜினியின் 64வது படம், தமிழ்த் திரையுலகில் அவருக்கு மாபெரும் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த, மாபெரும் வெற்றிப் படம். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் அட்டகாசமான பாடல்கள்.

இருப்பினும் கிராமத்து இசைக்கருவிகளான உருமி மேளம், நையாண்டி மேளம், நாதஸ்வரம் என அனைத்தும் கலந்து, துள்ளிவரும் துள்ளலிசையோடு வரும் பாடல் இது. இப்பாடல் மனதிற்கு உற்சாகத்தைத் தரும் என்பதால்  எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும்.

எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..!


பொதுவாக என் மனசு தங்கம்..! | Musicians Available



Friday 25 June 2010

திருடாதே பாப்பா திருடாதே..! - பழைய திரைப்படப் பாடல்..!


சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் 1961-ல் வெளிவந்த 'திருடாதே' என்ற படத்தில் இடம் பெற்ற ''திருடாதே... பாப்பா திருடாதே...'' என்ற பாடல்தான் இன்று நான் பதிவிலிடுவது.

மலைக்கள்ளன், நாடோடி மன்னன் படங்களின் வெற்றிக் கூட்டணியான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,எம்.ஜி.ஆர்,எஸ். எம். சுப்பையா நாயுடு கூட்டணிதான் இப்படத்திலும் இடம்பெற்றது.

இப்படத்தின் பாடல்களை எல்லாம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்கள். பாடியவர் நமது டி.எம்.எஸ். இப்படத்தை இயக்கியவர். ப. நீலகண்டன். இப்படத்தில் ஒரு சிறப்பு உண்டு. கவிஞர் கண்ணதாசன் இப்படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கிறார். பாடல் ஏதும் எழுதவில்லை என்று நினைக்கிறேன்...

பட்டுக் கோட்டையாரின் இப்பாடல் வரிகள் அத்துனையும் வைரம்...

''திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே..!''

''இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா
பதுக்குற வேலையும் இருக்காது ..!''

''உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது..!''


எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..!


திருடாதே பாப்பா திருடாதே..! | Music Codes

-------

(1959 - ஆம் ஆண்டு சீர்காழியில் நடைபெற்ற நாடகத்தின்போது எம்.ஜி.ஆரின் கால் எலும்பு முறிந்து! இனி அவ்வளவுதான்! எம்.ஜி.ஆரால் நடக்க முடியாது! நடிக்க முடியாது என்றார்கள். தனது மன உறுதியால், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, ‘திருடாதே’ திரைப்படத்தில் நடித்துப் படவுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

திருடாதே’ எம்.ஜி.ஆர். சரோஜாதேவியோடு இணைந்து நடித்த சமூகப்படம். ஏ.எல். சீனிவாசன் தயாரித்த இப்படத்தின் வசனத்தை கண்ணதாசன் எழுத, ப. நீலகண்டன் இயக்கினார். ராஜாராணி கதைகளிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு இப்படத்தின் வெற்றி பெரும் திருப்புமுனையாகவே 
அமைந்தது எனலாம்)

 இப்பாடலின் திரைவடிவம்